2021 புத்தாண்டு ராசி பலன்கள் – ரிஷபம் | New year Rasi Palan Rishabam 2021 | New year Rasi Palangal 2021 Tamil

 

2021 புத்தாண்டு ராசி பலன்கள் – ரிஷபம்


2021 – ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா? ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சி ஆவார். ராகு கேது முறையே 1 மற்றும் 7 ஆகிய இடங்களில் இருப்பார்கள். செவ்வாய் பகவான் உங்கள் ராசியிலிருந்து பன்னிரண்டாம் இடத்தில் இருக்கப் போகின்றார். மேலும் அவ்வாண்டின் குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்களுடைய ராசியின் நான்காம் வீட்டை அவர் பார்வையிடுவார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு ஏற்ற இறக்கத்துடன் இருக்கப் போகின்றது. இன்பம் வந்தாலும் அதிகமாகவும், துன்பம் வந்தாலும் அதிகமாகவும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்ப்புகளை நீக்கி, வருவது வரட்டும் என்கிற மனப்பான்மை இருந்தால் நடப்பதெல்லாம் நன்மையாகும்.

குடும்பம்:

குடும்பத்தைப் பொறுத்தவரை ரிஷப ராசிக்காரர்களுக்கு வர இருக்கும் இந்த ஆண்டு நல்ல பலன்களையே கொடுக்கும். அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டாலும், அதனால் பெரிய பாதிப்புகள் ஒன்றும் உண்டாகப் போவதில்லை. குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் யாராக இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். குறிப்பாக கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உருவாகும். இதுவரை எலியும், பூனையுமாக இருந்தவர்கள் கூட நட்புறவாக மாறிவிடுவார்கள்.

வியாபாரம் மற்றும் தொழில்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் உண்டாகும். இதுவரை மந்த நிலையில் இருந்து வந்த உங்களுடைய தொழில் படிப்படியாக முன்னேற்றம் அடையும் வாய்ப்புகள் உண்டு. வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். சனி பகவான் அமர இருக்கும் இடம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தொழில் சார்ந்த விஷயங்களில் பெரும் பாதிப்புகள் ஒன்றும் ஏற்படாது. வருட இறுதியில் புதிய மாற்றங்கள் நிகழக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

உத்தியோகம்:

உத்தியோகத்தில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் நோக்கிய பயணத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் பதவி உயர்வும் எளிதாகக் கிடைக்கும். இதனால் ஊதிய உயர்வும் சாதக பலனையே கொடுக்கும். தீய நண்பர்களின் சகவாசத்தை குறைத்துக் கொள்வது உத்தமம். நீங்கள் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு எப்பொழுதும் மன்னிப்பு என்பதே கிடையாது. செய்த தவறுக்கு உரிய பலனையும் அனுபவிப்பீர்கள்.

பொருளாதாரம்:

செவ்வாய் பகவான் 12 இல் இருப்பதால் தாராள தன வரவு விரயம் ஆகிக் கொண்டே இருக்கும். ஒருபுறம் பணம் வந்து கொண்டே இருந்தாலும், இன்னொருபுறம் வேறு வழியாக சென்று கொண்டே இருக்கும். நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அதனை தவிர்க்க இயலாது. திடீர் தனவரவு அதிர்ஷ்டம் தரும் வகையில் இறுதியில் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம்.

பெண்களுக்கு:

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு இவ்வாண்டு நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் பிரகாசிக்க நினைக்கும் பெண்களுக்கு எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் கிரகங்களின் ஆட்சி பலத்தால் வெற்றியைக் காண்பீர்கள். வாழ்க்கையில் இதுவரை பட்ட கஷ்டங்களை எல்லாம் தாண்டி அடுத்த படிக்கு முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற உணவுகளை தவிர்த்து நல்ல உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் உற்சாகம் நிச்சயம் உண்டாகும்.

பரிகாரம்:

பித்ரு பூஜைகளை சரியாக நிறைவேற்றுவதும், குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பரிகாரமாக அமையும். நினைத்தது நடக்க சனிக்கிழமைகளில் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள் நல்லது நடக்கும். வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Related Posts

கருத்துரையிடுக